மனதில் தோன்றியவையும் மனதிற்கு பிடித்தவையும் தூறலாகவும் தொடர் மழையாகவும் தருகிறேன் . . .
Sunday, March 29, 2009
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்
..... ஸ்பெஷல் ரிப்போர்ட்
ரஜினியின் அரசியல் நிலைப் பாடு என்ன? அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது தொடர்ந்து சினிமாதானா ...இதுதான் தற்போது தமிகத்தின் காஸட்லி கேள்வி.
இந்த கேள்வி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவசியமன ஒன்றாகிவிட்டது. ஒரே கேள்வியை பல கோணங்களில் அவரிடம் மீடியாக்களும் பல பிரபலங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
1985ல் இருந்தே ரஜினியை நோக்கி இந்த கேள்வி கிளம்பிவிட்டது. இதற்கு 1992 முதல் ரஜினி பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.
‘’நான் அரசியலில் நுழையப்போவதாகவும்... அப்படி இப்படின்னு பரபரப்பாக பேசிக்கிட்டு இருக்காங்க. எழுதிக்கிட்டு இருக்காங்க. கமல் இருக்கிறார். இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்னை மட்டும் ஏன் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனா, நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அது ஆண்டவனுக்குத்தான் தெரியும். அரசியல் என்பது புலி வால் புடிச்சது மாதிரி. அதை விடவும் முடியாது. விட்டால் கடிச்சு குதறிவிடும்.’’ இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த ஒரு பாராட்டுக்கூட்டத்தில் 1992ல் ரஜினி பேசியது.
பாட்சா படத்தின் நூறாவது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேச அப்போது முதல்வராக இருநத ஜெயலலிதா சீறி எழுந்தார். இதற்கு முன்பு ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவுக்காக நிறுத்தப்பட்ட டிராபிக்கில் ரொம்ப நேரம் காத்திருக்க விரும்பாத ரஜினி காரிலிருந்து இறங்கி தமது வீடடுக்கு நடந்து போனதால் எழுந்த சர்சையும் ஜெயலலிதாவின் கோபத்தை கிளறிவிடிருந்த நேரம் அது.
பிலிம் சிட்டிக்கு பெயர் வைப்பது குறித்து ரஜினி சொன்ன கமெண்ட் மேலும் அன்றைய முதல்வர் ஜெவை கோபம் கொள்ள வைத்தது. தொடர்ந்து அவரை சீண்டுவதாக ஜெவின் கட்சியினர் கருதினர். இதனால் ரஜினி மீதான விமர்சன தாக்குதல்கள் கடுமையாக எழுந்தன.
ஜெயலலிதா அரசாங்கம் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று எழுத்தாளர் சுஜாதா கேட்டபோது(1994), ‘’நல்லா ஆட்சி பண்றாங்க. ரொம்பத் திறமையான் லேடி. நல்ல நால்ட்ஜ் இருக்கு. எனக்கு உறுத்தற விசயம் இந்த கட் அவுட் பப்ளிசிட்டி இதெல்லாம்தான். இவ்வளவு இண்டெல்லிஜெண்ட்டான லேடிக்கு இது ஏன் புரியமாட்டேக்குது.ஆனா செய்யறதை சைலண்ட்டா அமைதியா செய்தா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். என்றார். அதே நேர்காணலில் ரஜினியின் அரசியல் பற்றி கேட்டார் சுஜாதா.
‘’அவுங்க எல்லாருக்குமே (ரசிகர்களுக்கு) நான் ஏன் அரசியலுக்கு வரமாட்டேன் என்கிற கேள்வி இருக்கு. இதற்கு தெளிவான பதிலை ஏன் சொல்லமாட்டேங்கிறேன்னு நினைக்கிறாங்க. நான் தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லியிருக்கேன். எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாதுன்னு. அதுமட்டுமல்ல. இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன் என்றால் நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலேயும் சொல்லமுடியாது. நாளைய சூப்பர் ஸ்டார் யார்? வில்லன் யார்? என்று யாருமே சொல்லமுடியாது.’’என்றார்.
அவரது அரசியல் ஈடுபாடு குறித்து கேட்கப்பட்டபோது, ‘’கொஞ்சம் கூட இல்லை. எதுக்காக அரசியல் வேணும். பணம், புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யனும்....இதுதானே. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு இது எல்லாமே கிடைச்சிருக்கு. அரசியல் நிலைமையில் யாருக்கும் நல்லது செய்யமுடியாது. இது எனக்கு தெரியும்.’’என்றார்.
அரசியலுக்கு வந்தால் உங்கள் கைக்கு சக்தி வாய்ந்த பதவி வரும் இல்லையா? என்று கேட்டபோது, ‘’தனிமனிதனால எதுவும் சாதிக்கவே முடியாது. எல்லாமே மாறனும். ஒட்டு மொத்த அமைப்பே மாறனும். புது வெள்ளம்னு சொல்றாங்க இல்லையா..அது மாதிரி..அரசியல் அமைப்பே மாறனும். இப்ப இருக்குற சிஸ்டம்ல யாரலேயும் ஒன்னும் பண்ண முடியாது. மொத்தமா மாறினாத்தான் உண்டு. எம்ஜியாரை எடுத்துக்குங்க . வந்த முதல் இரண்டு வருடம் எப்படியிருந்தார். அதுக்கப்புறம் அவராலேயே ஒன்னும் செய்யமுடியவில்லையே.’’’ என்றார் ரஜினி.
முத்து படத்தில் ரஜினி பேசிய வசனங்கள் சில, ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தன. இதனால் ஜெவின் எதிர்ப்பும் அவரது கட்சியின் முக்கிய தலைவர்களின் எதிர் தாக்குதலும் ரஜினியை நோக்கி திரும்பின. அதே நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது அவசியம் என்ற சூழல் ஏற்பட்டது. 1996ல் மக்களும் ரஜினிக்கு ஆதரவு தர தயாராக இருந்த நிலையில் எதிர்பார்ப்பு இருந்தது. ரஜினி அப்போது அரசியலுக்கு வந்திருந்தால் ஜெயித்திருக்கலாம். அப்போது அவர் வாய்ஸ் மட்டும் கொடுத்தார். அவர் வாய்ஸ் கொடுத்த திமுக கூட்டணி கட்சி ஜெயித்தது.
அடுத்த தேர்தலில் ஜெ ஆட்சிக்கு வந்தார். மறுபடியும் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதங்கள் எழுந்தன. ’’ ரஜினி தனது படங்கள் வரும்போது எல்லாம் அரசியல் பேசுவார். அதுவரை அவர் பேச மாட்டார். இது அவருடைய வியாபார உக்தி.’’ என்கிறார் பத்திரிக்கையாளர் ஞானி.
சமீபகாலத்தில் ரஜினி அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என்ற சர்ச்சை பெரிதாக எழுந்திருப்பதற்கு காரணம், அவருக்கு பிறகு சினிமாவுக்கு வந்த விஜயகாந்த், சரத்குமார், ரஜினியின் நண்பர் சிரஞ்சீவி எல்லாம் அரசியல் கட்சி தொடங்கிவிட்டார்கள்.
அவர்களைவிட புகழ்பெற்ற நடிகரான ரஜினி ஏன் அரசியல் கட்சி ஆரம்பிக்க இத்தனை யோசிக்கிறார் என்றுதான் அவரது ரசிகர்கள் துடிக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சிதான் சமீபத்தில் ரஜினி ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கையும் என்னை யாரும் நிர்பந்திக்க கூடாது என்ற அறிக்கையும். ரஜினி எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அவரை பொறுத்தவரை எல்லாம் சரியாக நடக்கவேண்டும்.
இல்லை என்றால் கோபம் வந்துவிடும். தனது அரசியல் பிரவேசத்தால் படங்களின் வியாபாரம் பாதிக்கும், சொந்த வாழ்வில் நிம்மதியில்லாமல் போகும் என்று யோசித்துதான் அவர் அரசியலை வாய்ஸ் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்.
அது சரி, ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற கேள்வியை மறுபடியும் எழுப்புகிறவர்களுக்கு ரஜினியை ஓரளவுக்கு புரிந்து கொண்ட, ரஜினியுடன் பல தடவை நேரில் சந்தித்து பழகியிருக்கும் நக்கீரன் கோபால் சொன்னதுதான் நிஜமோ என்று நினைக்கத்தோன்றுகிறது
1999ல் இந்தியா டுடேவில் நக்கீரன்கோபால் சொன்னது : ‘’ரஜினிக்கு சொந்த அரசியல் அபிலாசைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தான் ஆட்சிக்கு வரனும். தனக்கு பதவி அதிகாரம் வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருப்பதாக நான் நினைகவில்லை. ஆனால் அவர் நேரடி அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு லாபம்னு நினைக்கறவங்க பலர் அவர் அரசியலுக்கு வரனும்னு விரும்பராங்க. மீடியாவும் அந்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணுது’’.
நன்றி!நக்கீரன் நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment